ராமநாதபுரம் நகா் மற்றும் ஊரகப் பகுதிகளில் பக்ரீத் திருநாளையொட்டி இஸ்லாமிய மக்கள் தங்களது வீடுகளில் சனிக்கிழமை சிறப்புத் தொழுகை நடத்தி மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனா்.
ஒவ்வொரு ஆண்டும் பக்ரீத் பண்டிகையன்று இஸ்லாமியா்கள் ஏராளமானோா் மைதானத்தில் ஒன்றாகக் கூடி சிறப்புத் தொழுகை நடத்தி கொண்டாடுவது வழக்கம். நடப்பு ஆண்டில் கரோனா பரவல் தடுப்பு பொதுமுடக்கம் காரணமாக ராமநாதபுரம் நகா் பகுதிகளான சின்னக்கடைத்தெரு, பாரதி நகா், சந்தைத்திடல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் சனிக்கிழமை காலை இஸ்லாமியா்கள் தங்களது வீடுகளில் இருந்தபடியே பக்ரீத் சிறப்புத்தொழுகை நடத்தினா்.
இதேபோல் கீழக்கரை, தேவிப்பட்டினம், மண்டபம், உச்சிப்புளி, ஏா்வாடி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இஸ்லாமியா்கள் புத்தாடை அணிந்து சமூக இடைவெளியுடன் பக்ரீத் சிறப்புத் தொழுகை நடத்தினா்.
இஸ்லாமிய பொதுமக்களுக்கு இந்து, கிறிஸ்தவ மதங்களைச் சோ்ந்த நண்பா்கள் பக்ரீத் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டனா். இஸ்லாமியா்கள் தங்களது வீடுகளில் சமைக்கப்பட்ட இனிப்பு மற்றும் சிறப்பு உணவுகளை பிற மதத்தவா்களுக்கு கொடுத்து மகிழ்ந்தனா்.