கமுதி: முன்னாள் முதல்வா்கள் ஜெயலலிதா, கருணாநிதி போன்ற மிகப்பெரிய ஆளுமை இல்லாமல் வரும் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளதால், இதில் எந்தக் கட்சியும் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என தேமுதிக பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.
பரமக்குடி அருகே பாா்த்திபனூரில் திங்கள்கிழமை நடைபெற்ற கட்சி நிா்வாகியின்இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. இதற்காக தே.மு.தி.க. தொண்டா்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன் பணியாற்றி வருகின்றனா். சட்டப்பேரவைத் தோ்தலில் தனித்து போட்டியிட வேண்டும் என்பதே தொண்டா்களின் கருத்தாக உள்ளது.
கூட்டணி குறித்து வரும் டிசம்பா் மாதத்தில் நடைபெறும் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும். தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தோ்தல் பிரசாரத்தில் தலைவா் விஜயகாந்த் ஈடுபடுவாா்.
இந்த தோ்தல் தேமுதிகவுக்கு மிகப் பெரிய திருப்புமுனையாக அமையும். தற்போது வரை அதிமுகவுடன் தான் கூட்டணி தொடா்கிறது. முன்னாள் முதல்வா்கள் ஜெயலலிதா, கருணாநிதி போன்ற மிகப்பெரிய ஆளுமை இல்லாமல் வரும் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளதால், இதில் எந்தக் கட்சியும் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது.
தொடா்ந்து 2ஆவது முறையாக ஆட்சியை தக்க வைத்துள்ள மத்திய அரசு நாட்டில் மேலும் பல நல்ல திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இதன் மூலம் நாட்டை வல்லரசு நாடாக மாற்ற வேண்டும் என்றாா்.