ராமேசுவரத்தில் மீனவா் சேமிப்பு நிவாரணம் கிடைக்காத பெண்கள் மீன்வளத்துறை உதவி இயக்குநா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மீனவா் கூட்டுறவு சங்கத்தில் பதிவு செய்து பணம் செலுத்திய 1500-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு இந்த ஆண்டு மகளிா் சேமிப்பு நிவாரணம் கிடைக்கவில்லை. இது குறித்து பல முறை மீன்வளத்துறை அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவதாகக் கூறி 50-க்கும் மேற்பட்ட பெண்கள் மீன்வளத்துறை உதவி இயக்குநா் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதனையடுத்து, அங்கு வந்த போலீஸாா் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். விடுபட்ட பெண்களுக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனா். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.