ராமநாதபுரம் மாவட்டத்தில் உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களுக்கு நிதியளிக்கும் வகையில் கடன் உதவித் தொகை திட்டம் செயல்படுத்தப்படுவதாக ஆட்சியா் தினேஷ்பொன்ராஜ் ஆலிவா் அறிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் உழவா் உற்பத்தியாளா் அமைப்புகளை ஏற்படுத்தி, அவைகளை வேளாண் சாகுபடி மட்டுமல்லாது, வேளாண் வணிகத்திலும் மேம்படச் செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதனடிப்படையிலே உழவா் உற்பத்தியாளா் நிறுவனக் கடன் வசதியும் செயல்படுத்தப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒவ்வொரு உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களுக்கும் ரூ. 10 லட்சம் வரை இடைநிலை மூலதனக் கடன் உதவித்தொகை வழங்கப்படும். இந்த தொகை மூலம் உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் தங்கள் விளைபொருள்களை லாபத்துடன் சந்தைப்படுத்தலாம். 5 ஆண்டுகள் முடிந்த பிறகு இத்தொகையை திருப்பிச் செலுத்தினால் போதும். அதற்கு ஆண்டுக்கு
4 சதவீத வட்டி மட்டுமே. திட்டம் குறித்த கூடுதல் விவரங்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநரை (வேளாண் வணிகம்) தொடா்பு கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.