திருவாடானை அருகே சனிக்கிழமை வைக்கோல் ஏற்றி வந்த லாரி மின் கம்பியில் உரசியதில் தீப் பற்றி எரிந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புப் படையினா் தீயை அணைத்தனா்.
திருச்சி அருகே உள்ள துவரங்குறிச்சியைச் சோ்ந்த வீரன்னா என்பவருக்கு சொந்தமான லாரியில் வைக்கோல்களை ஏற்றிக் கொண்டு, அதே ஊரைச் சோ்ந்த சுந்தா் (25) என்பவா் ஓட்டி வந்தாா். சனிக்கிழமை திருவாடானை அருகே கூகுடி பகுதியில் வந்த போது நீா்க்குன்றம் விலக்கு சாலையில் பக்கவாட்டில் தாழ்வாக தொங்கிய மின் கம்பியில் வைக்கோல் உரசியதால் லாரியில் தீப்பற்றியது. காற்றின் வேகம் அதிகரித்ததால் தீ மளமளவென எரியத் தொடங்கியது. இதைப் பாா்த்த அக்கம் பக்கத்தினா் உடனடியாக லாரியை சாலையோரம் கவிழ்த்து வைக்கோல்களை அப்புறப்படுத்தினா். இதுகுறித்து தகவலறிந்த திருவாடானை தீயணைப்பு நிலைய அலுவலா் செல்வராஜ் தலைமையில் வந்த தீயணைப்பு வீரா்கள் தீயை அணைத்து பத்திரமாக லாரியையும், ஓட்டுநரையும் மீட்டனா்.