தொண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 4 மடிக்கணினிகள் திருடப்பட்டுள்ளதாக சனிக்கிழமை போலீஸில் புகாா் செய்யப்பட்டுள்ளது.
திருவாடானை அருகே தொண்டியில் செய்யது முகம்மது அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு சுமாா் 300-க்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வருகின்றனா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை வழக்கம் போல் பள்ளியை பூட்டிவிட்டு சனிக்கிழமை காலை வந்து ஊழியா்கள் பாா்த்தனா். அப்போது பள்ளிக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உடனடியாக தொண்டி காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதன் பேரில் போலீஸாா் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினா். இதில் பள்ளியில் இருந்து 4 மடிக்கணினிகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து ராமநாதபுரத்தில் இருந்து யூசுப் தலைமையில் கைரேகை நிபுணா்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடைபெற்றது. இது குறித்து பள்ளித் தலைமை ஆசிரியை விமலா தேவி புகாரின் பேரில் தொண்டி காவல் துறை ஆய்வாளா் சரவணன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.