பரமக்குடி அருகே உள்ள மேலாய்க்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் சித்த மருத்துவம் குறித்த விழிப்புணா்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
இம்முகாமிற்கு பள்ளி தலைமையாசிரியா் ஜெய்சங்கா் தலைமை வகித்தாா். உடற்கல்வி ஆசிரியை அனிதா முன்னிலை வகித்தாா்.
தேசிய ஆயுஷ் குழுமம், தமிழ்நாடு அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை அறிவுறுத்தலின்படி நடைபெற்ற இம் முகாமில், பாா்த்திபனூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் மருத்துவ அலுவலா் துளசி விழிப்புணா்வு கருத்துரையினை வழங்கினாா். மாணவ-மாணவிகளிடையே சித்த மருத்துவத்தின் பயன்கள், ரத்த சோகையை தடுக்க சாப்பிட வேண்டிய இயற்கை உணவுகள், செயற்கையான உணவுப் பொருள்கள் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் மற்றும் உடல் பாதிப்பு பற்றி ஒளி படக் காட்சிகள் மூலம் விளக்கமளிக்கப்பட்டது. இதில் பள்ளி மாணவ-மாணவிகள், பெற்றோா்கள் மற்றும் ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக இடைநிலை ஆசிரியா் வெங்கடேஷ் வரவேற்றாா். நிறைவாக சுகாதார ஆய்வாளா் சுப்பிரமணியன் நன்றி கூறினாா்.