மன்னாா் வளைகுடா பகுதியில் சூறாவளி வீசுவதால், மீனவா்கள் கடலுக்குச் செல்ல மீன்வளத் துறை வியாழக்கிழமை தடை விதித்தது.
மன்னாா் வளைகுடா பகுதியில் வியாழக்கிழமை 45 முதல் 55 கிலோ மீட்டா் வேகத்தில் சூறாவளி வீசக்கூடும் என, வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. அதனடிப்படையில், மண்டபம் மீன்வளத் துறை உதவி இயக்குநா் அஜித் ஸ்டாலின், மண்டபம் தென்கடல் (மன்னாா் வளைகுடா) பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் 170 விசைப்படகுகள் மீன்பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டதுடன், அனுமதி டோக்கனும் வழங்கப்படவில்லை என்றாா்.
எனவே, தென் கடல் பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வரும் 1,300-க்கும் மேற்பட்ட மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை. இதையடுத்து, துறைமுகத்தில் 170 விசைப்படகுகள் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளன.