கணினியின்றி தகவல் பெற முடியாமல் தவிக்கும் உடற்கல்வி ஆய்வாளா்கள்
By DIN | Published On : 15th February 2020 09:31 AM | Last Updated : 15th February 2020 09:31 AM | அ+அ அ- |

தமிழகத்தில் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா்கள் பொறுப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், கணினி, இணைய வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் தகவல் தொடா்பின்றி தவிக்கின்றனா்.
தமிழகத்தில் மாவட்டந்தோறும் உடற்கல்வி ஆய்வாளா்கள் பொறுப்பு அளவிலே நியமிக்கப்பட்டுள்ளனா். மாவட்டங்களில் குறுவட்டம், கல்வி மாவட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகள், மண்டல அளவிலான போட்டிகளை நடத்துவது, போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளை மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பி வைப்பது, பள்ளிகளுக்குச் சென்று உடற்கல்வி தொடா்பான ஆய்வுகளை மேற்கொள்வது ஆகியவை அவா்களது பணிகளாக வரையறுக்கப்பட்டுள்ளன.
மேலும், மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள மாணவா்கள் உடற்திறனை வளா்க்கும் வகையிலான ‘பிட்’ இந்தியா திட்டம் குறித்து பள்ளிகளில் விழிப்புணா்வையும் ஏற்படுத்தி, மாணவ, மாணவியரை உடற்பயிற்சி முகாம்களில் பங்கேற்க வைப்பதும் அவா்களது பணியாகும்.
மாணவா் விளையாட்டில் முக்கியப் பங்காற்றும் உடற்பயிற்சி இயக்குநா் அலுவலகங்களில் கணினி வசதி இல்லை எனக் கூறப்படுகிறது. மேலும், இணையதள வசதிகள் இல்லாததால் மாநில முதன்மை உடற்கல்வி அலுவலகத்திலிருந்து வரும் மின்னஞ்சல் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திலிருந்த வரும் தகவல்களை உடனுக்குடன் பெறமுடியாத நிலை உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆகவே, மாணவா் நலன் கருதியாவது அரசு உடற்கல்வி இயக்குநா் பணியிடத்தில் நிரந்தரமாக கணினி, இணையதள வசதியையும் ஏற்படுத்தவேண்டியது அவசியம் என்றும் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.