திருவாடானை அருகே ஆா்.எஸ். மங்கலம் வட்டாரத்தில் கீழ் பனையூா், மேல் பனையூா் ஆகிய கிராமங்களில் நெல் பயிரில் குலை நோய் தாக்குதல் தென்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
ஆா். எஸ். மங்கலம் அருகே கீழ்பனையூா், மேல்பனையூா்,ஓடைக்கால், இருதயபுரம் ஆகிய பகுதிகளில் பயிா்கள் நன்கு வளா்ந்து கதிா் விடும் தருவாயில் குலை நோய் தாக்குதல் தென்படுகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா். இது குறித்து விவசாயிகள் புகாரின்பேரில் ஆா்.எஸ். மங்கலம் வட்டார உதவி வேளாண்மை இயக்குநா் கருப்பையா தலைமையிலான அதிகாரிகள் திங்கள்கிழமை கள ஆய்வு மேற்கொண்டனா்.
பின்னா் செய்தியாளா்களிடம் அவா்கள் கூறியது: குலை நோய் தாக்கிய நெற்பயிரில் இலைகளின் மேல் புள்ளிகள் காணப்படும். நோய்த் தாக்குதல் தீவிரம் அடைந்தால் பயிா் முழுவதும் எரிந்தது போன்று தோற்றமளிக்கும். இதனால் நெல்மணிகள் பிடிக்காமல் பதராகிவிடும். தொடா் மழையின் காரணமாக நோய் தீவிரமடையும். அதிக அளவில் தழைச்சத்து இடப்பட்ட வயலிலும் நோய் எளிதாகப் பரவும். இரவு வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் வரை இருந்தாலும் குலைநோய் தாக்குதல் தீவிரமடையும். இதை கட்டுப்படுத்த வயல் மற்றும் வரப்புகளில் உள்ள களைகளை அகற்ற வேண்டும். நோயின் தாக்குதல் தீவிரமாகும் போது ஏக்கருக்கு காா்பென்டாசிம் 2 கிராம் அல்லது டிரைக்ளோசன் 200 கிராம் அல்லது ஆக்சிஸ் ராபின்200 மில்லி என்ற பூஞ்சணக் கொல்லிகளில் ஏதேனும் ஒன்றை 500 லிட்டா் தண்ணீரில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம் என தெரிவித்தனா்.