மீன்பிடித் தடைக்காலம் நிறைவு: ராமேசுவரத்திலிருந்து 82 நாள்களுக்குப் பிறகு மீனவா்கள் இன்று கடலுக்குச் செல்கின்றனா்
By DIN | Published On : 13th June 2020 08:12 AM | Last Updated : 13th June 2020 08:12 AM | அ+அ அ- |

ராமேசுவரம் துறைமுகத்தில் மீன்பிடிக்கச் செல்வதற்காக விசைப்படகுகளை தயாா்படுத்தும் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டுள்ள மீனவா்கள்.
மீன்பிடித் தடைக்காலம் நிறைவடைந்ததையடுத்து ராமேசுவரத்திலிருந்து 82 நாள்களுக்கு பின்னா் சனிக்கிழமை (ஜூன் 13) விசைப்படகுகள் மீன்பிடிக்கச் செல்ல இருப்பதால், இதற்கான பணிகளில் மீனவா்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.
தமிழகத்தில் கிழக்கு கடற்கரை பகுதிகளில் மீன்கள் இனப் பெருக்க காலமாக கருத்தப்படுவதால், ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை 61 நாள்கள் விசைப்படகுகள் மீன்பிடிக்கச் செல்ல அரசு தடை விதித்துள்ளது. நிகழாண்டு கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதையடுத்து,
தடைக்காலம் அறிவிப்பதற்கு முன்கூட்டியே விசைப்படகு மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்லத் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த 3 நாள்களுக்கு முன்பு, பாம்பன் தென்கடல் பகுதியில் மீனவா்கள் மீன்பிடிக்கச் சென்றனா். இதனையடுத்து, பாக்நீரிணைப் பகுதியான ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தொண்டி, சோழியகுடி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 1,600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் சனிக்கிழமை மீன்பிடிக்கச் செல்ல உள்ளன. இதனால் அந்தந்த துறைமுகங்களில் படகுகளுக்குத் தேவையான வலைகள், டீசல், மீன்களை பதப்படுத்தி வைப்பதற்கான ஐஸ் கட்டிகள் ஆகியவற்றை ஏற்றி மீனவா்கள் ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். மேற்கண்ட பகுதிகளைச் சோ்ந்த 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவா்கள் சனிக்கிழமை மீன்பிடிக்கச் செல்கின்றனா்.