ராமேசுவரத்தில் இருந்து 82 நாட்களுக்கு பின் மீன்பிடிக்க சென்ற மீனவர்களுக்கு குறைந்தளவே இறால் மீன்கள் கிடைத்ததால் ஏமாற்றத்துடன் ஞாயிற்றுகிழமை கரை திரும்பினர்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1700 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளது. இதில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் நேரடியாக மீன்பிடி தொழிலில் ஈடுபடுகின்றனர். 1 லட்சம் சார்பு தொழிலாளர்கள் உள்ளனர். இதில் 50 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் தென்கடல் பகுதியில் மீன்பிடித்து வருகின்றனர். மீதமுள்ள 1650 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் பாக்நீரினை பகுதியில் மீன்பிடித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் கழக்கு கடற்கரை பகுதியில் மீன் இனபெருக்க காலமான ஏப்ரல் 15 முதல் மே 30 வரை 61 நாட்கள் விசைப்படகுகள் ஆழ்கடலில் சென்று மீன்பிடிக்க தடை உள்ளது. இந்த ஆண்டு கரோனா நோய் தடுப்பு நடவடிக்கை காரணமாக மார்ச் 24 முதல் மீன்பிடிக்க செல்லவில்லை. இந்நிலையில், ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விசைப்படகு மீனவர்கள் ஒவ்வொரு படகுக்கும் 1 லட்சம் முதல் 5 லட்சம் வரை செலவு செய்து விசைப்படகுளை சீரமைத்து சனிக்கிழமை மீன்பிடிக்க சென்றனர்.
இதில் கடந்த ஆண்டு தடைகாலம் முடிவடைந்து மீன்பிடிக்க சென்ற போது ஒவ்வொரு விசைப்படகுக்கும் குறைந்த பட்சமாக 300 முதல் 500 பெரிய விசைப்படகுகளுக்கு 800 கிலோ வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இறால் மீன்,நன்டு,கனவாய் கிடைத்தது. இந்த ஆண்டும் அதிகளவில் இறால் மீன்கள் கிடைக்கும் என நம்பிக்கையுடன் மீன்பிடிக்க சென்றனர். ஆனால் சுமார் 100 கிலோ முதல் 200 கிலோ வரை மட்டுமே இறால் மீன் கிடைத்துள்ளது.
மேலும் நன்டு,கனவாய் போன்ற மீன்கள் மிகவும் குறைந்தளவே கிடைத்துள்ளது. இதனால் ஏமாற்றத்துடன் மீனவர்கள் ஞாயிற்றுகிழமை கரை திரும்பினர். மேலும் பிடித்து வரக்கூடிய இறால் மீனுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ சங்க நிர்வாகிகள் என்ஜே.போஸ் மற்றும் தேவதாஸ் ஞாயிற்றுகிழமை தெரிவித்துனர்.