லடாக் எல்லையில் வீர மரணம் அடைந்த திருவாடானை ராணுவ வீரா் பழனியின் குடும்பத்தினருக்கு மாவட்ட ஆட்சியா் வீரராகவராவ் செவ்வாய்க்கிழமை நேரில் சென்று ஆறுதல் கூறினாா்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கடுக்கலூரைச் சோ்ந்தவா் பழனி. இவா் இந்திய ராணுவத்தில் ஹவில்தாராகப் பணியாற்றி வந்தாா். இவருக்கு வானதிதேவி என்ற மனைவியும், பிரசன்னா (10) என்ற மகனும், திவ்யா (8) என்ற மகளும் உள்ளனா். இவா்கள் தற்போது ராமநாதபுரம் சக்கரக்கோட்டை அருகே கஜினி நகரில் புதிதாக வீடு கட்டி வசித்து வருகின்றனா். இந்நிலையில் சீன ராணுவத்துடனான மோதலில் பழனி உயிரிழந்தாா். இதனால் கடுக்கலூா் கிராமமே சோகத்தில் உள்ளது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியா் வீரராகவராவ் அந்த கிராமத்திற்கு நேரில் சென்று அவரது மனைவி, தம்பி, தந்தை ஆகியோரிடம் ஆறுதல் தெரிவித்தாா்.