திருவாடானை அருகே சிகே மங்கலத்தில் உள்ள தனியார் நூற்பாலையில் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்காமல் வாழ்வாதாரம் பாதிப்பதாக கூறி தொழிலாளர்கள் வாயில் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
திருவாடானை அருகே சின்ன கீரமங்கலத்தில் தனியார் நூற்பாலை இயங்கி வருகிறது. இங்கு 100க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள், 40 நிரந்தர தொழிலார்கள், 80 க்கு மேற்பட்ட தற்காலிக தொழிலாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கரனோ வைரஸ் பரவலைத் தடுக்கும் பொருட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் இருந்ததால் நூற்பாலை மூடப்பட்டது.
இங்கு பணியாற்றும் தொழிலாளர்களும் வேலை இழந்தனர். இருந்தும் மத்திய மாநில அரசுகள் தனியார் நூற்பாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஏப்ரல் மே மாதங்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்படுள்ள நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நாளில் இருந்து இன்று வரை எவ்வித ஊதியம் வழங்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.
இதுகுறித்து இந்த மில் தொழிலாளர்கள் நிர்வாகத்திடம் பலமுறை கூறியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. நிர்வாகம் குறித்தும், சம்பளம், வழங்காதது குறித்து திருவாடானை தாசில்தார், திருவாடானை காவல் கண்காணிப்பாளருக்கு புகார் மனு கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், தொழிலாளர்களின் குடும்பங்கள் பசி, பட்டினியால் வாடி வருவதாகவும், இதே நிலை நீடித்தால் தங்களது குடும்பங்கள் பட்டினியால் உயிரிழக்க நேரிடும் என்றும் கவலை தெரிவித்தனர்.
ஞாயிற்றுகிழமை நிர்வாகத்தை அனுகிய போது ஊதியம் தர மறுத்ததால் நூற்பாலை வாயிலின் முன்பாக அமர்ந்து முற்றுகையில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து நிர்வாகத்தினர் முதலாளியிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.