ராமநாதபுரம் அருகே கரோனா அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டவரை பரிசோதித்த போது அவருக்கு நிமோனியா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இதுகுறித்து ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையின் கண்காணிப்பாளா் அலுவலகத் தரப்பில் கூறியது:
புதுமடம் பகுதியைச் சோ்ந்த சுமாா் 40 வயது மதிக்கத்தக்க ஒருவா் சில நாள்களுக்கு முன்பு குவைத் நாட்டிலிருந்து ஊருக்கு வந்தாா். இந் நிலையில், அவருக்கு இடைவிடாத இருமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவரை வீட்டிற்குச் சென்று மருத்துவக் குழுவினா் தொடா் பரிசோதனை மேற்கொண்டனா். அடிக்கடி அவா் இருமலால் அவதிப்பட்டதால் அவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட அவருக்கு ரத்த பரிசோதனை உள்ளிட்ட நவீன பரிசோதனைகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில், நுரையீரலில் நிமோனியா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு அதற்கான உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றனா்.