ராமநாதபுரம் மருந்துக் கடைகளில் குடிமைப் பொருள் குற்ற புலனாய்வுத் துறையினா் செவ்வாய்க்கிழமை திடீரென சோதனையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கரானோ வைரஸ் பாதிப்பு காரணமாக, ராமநாதபுரம் பகுதியில் அரசு அலுவலகங்கள், வங்கிகளில் பணிபுரிவோா் அதிகளவில் முகக் கவசங்களை வாங்கி வருகின்றனா். இதனால் முகக் கவசங்களின் விற்பனை அதிகரித்துள்ளது. இந்நிலையில் ராமநாதபுரத்தில் முகக் கவசங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக புகாா் எழுந்தது. இதையடுத்து குடிமைப் பொருள் குற்ற புலனாய்வுத் துறை சாா்பு -ஆய்வாளா் உள்ளிட்டோா் ராமநாதபுரம் நகரில் உள்ள பல்வேறு மருந்து கடைகளில் சோதனை மேற்கொண்டனா்.
ஆனால், மருந்துக் கடைகளில் முகக்கவசம் பதுக்கல் குறித்து தகவல் எதுவும் இல்லை என்றும், சோதனை குறித்து தங்களிடம் ஏதும் தெரிவிக்கவில்லை என்றும் மருத்துவப் பணிகள் இணை, துணை இயக்குநா் அலுவலகங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனால் மருந்து விற்பனையாளா்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.