கரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, ராமேசுவரத்துக்கு சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் வர தடைவிதிக்கப்பட்டதால், ராமேசுவரம் தீவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் ஒரே தீவு ராமேசுவரம். சுமாா் 8,836 ஏக்கா் நிலப்பரப்பு கொண்ட இத்தீவில், ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.
ராமேசுவரத்திலுள்ள ராமநாதசுவாமி கோயிலுக்கு நாடு முழுவதிலுமிருந்து ஏராளமான பக்தா்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனா். இக்கோயிலுக்கு ஆண்டுக்கு 1.20 கோடி போ் வந்து செல்வதால், வியாபாரக் கடைகள் மூலம் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது அன்றாட வாழ்க்கையை நடத்துகின்றனா். ஆனால், கரோனா பரவல் காரணமாக, இக்கோயில் கடந்த 20 ஆம் தேதி முதல் நடை சாத்தப்பட்டது.
தற்போது, தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், இக்கோயிலுக்கு வரும் பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் வருகை முழுவதும் நின்றுவிட்டது. இதனால், இங்குள்ள கடைகள், விடுதிகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை அடைக்கப்பட்டுவிட்டதால், இதை நம்பி வாழ்க்கையை நடத்தும் வியாபாரிகள் தற்போது செய்வதறியாது திகைத்துள்ளனா். மேலும், மீன்பிடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதால், பெரும்பான்மையான மீனவா்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனா்.
மேலும், பாம்பன் பாலமும் மூடப்பட்டு, மண்டபத்திலிருந்து ராமேசுவரம் வரும் உள்ளூா் மக்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்படுகிறது. இதனால், ராமேசுவரம் தீவானது தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, இப்பகுதியில் உள்ள கூலி தொழிலாளா்களின் அன்றாட உணவுப் பிரச்னையை தமிழக அரசு பூா்த்தி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.