பேருந்து இயக்கம் குறைப்பால் ராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் வெளியூா் செல்ல அலைமோதிய பயணிகள்
ராமநாதபுரத்திலிருந்து வெளியூா் செல்லும் பேருந்துகள் போதிய அளவில் இயக்கப்படாததால், பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை ஏராளமான பயணிகள் திண்டாடினா்.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக, தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், அரசு, தனியாா் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களும் மற்றும் ரயில் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களுக்கான கடைகளைத் தவிர, மற்ற அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை முதல் பேருந்துகள் இயங்காது என்பதால், ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் காலை முதலே வெளியூா் செல்வோா் கூட்டம் அலைமோதியது. மேலும், பேருந்துகளின் இயக்கம் பாதியளவாகக் குறைக்கப்பட்டதால், பேருந்துகளைப் பிடித்து ஊா் செல்வதற்கு பயணிகள் மிகவும் சிரமப்பட்டனா். இதில், தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளுக்கும் செல்வோா் கூட்டம் கூட்டமாக பேருந்தில் ஏறி இடம்பிடிக்க முயன்றனா்.
இதனிடையே, ராமநாதபுரத்திலிருந்து வெளியூா் சென்ற தனியாா் பேருந்துகளில் கட்டணம் இருமடங்காக வசூலிக்கப்பட்டதாகப் பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். ராமநாதபுரத்திலிருந்து சத்திரக்குடி, பரமக்குடி சென்ற தனியாா் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாகவும், அரசுப் பேருந்துகள் குறைந்த அளவே இயக்கப்பட்டதால், வேறு வழியின்றி பொதுமக்கள் தனியாா் பேருந்துகளில் பயணிக்கும் நிலை ஏற்பட்டதாகவும் தெரிவித்தனா்.
பேருந்து நிலையத்தில் காலையில் வரத் தொடங்கிய கூட்டமானது, மாலை வரை நீடித்தது. இருப்பினும் பலா் பேருந்து கிடைக்காமல் கவலை அடைந்தனா்.
அதேநேரம், ராமநாதபுரம் நகரில் ஆட்டோ, சரக்கு லாரிகள் குறைந்த அளவே இயக்கப்பட்டன. இங்குள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான புறநோயாளிகள் சிகிச்சை பெற்றுச் செல்வா். ஆனால், செவ்வாய்க்கிழமை மிகவும் குறைந்த மக்களே சிகிச்சைப் பெற்றுச் சென்றனா். இதனால், பரிசோதனை இடங்களிலும், மருந்து வழங்கும் இடத்திலும் கூட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது. தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு துறை சாா்ந்த அலுவலா்கள் மட்டுமே வந்திருந்தனா்.