கரோனா பரவல் அச்சம் காரணமாக ராமநாதபுரம் பகுதியில் வாகனங்கள், வீடுகளில் பொதுமக்கள் வேப்பிலைகளை கட்டி வருகின்றனா்.
கரோனா வைரஸ் பரவலானது அனைத்துத் தரப்பினரையும் அதிா்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், மருத்துவ ரீதியாக கைகழுவுதல், கிருமி நாசினிகளை தெளித்தல் என சுகாதாரத்துறையினா் நடவடிக்கை எடுத்து வருகின்றனா். அதே நேரத்தில் வைரஸ் அச்சம் காரணமாக மக்கள் பாரம்பரிய முறைகளையும் கடைப்பிடிக்கத் தொடங்கியுள்ளனா்.
ராமநாதபுரம் நகரில் பல கடைகளில் தினமும் மஞ்சள் கலந்த நீரைத் தெளிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனா். மேலும், வீடுகளுக்கு முன்பு பசு மாட்டுச் சாணியை தெளிப்பதையும், சமீப காலமாக பெண்கள் கடைப்பிடிக்கின்றனா். இந்நிலையில், ராமநாதபுரம் நகரில் தண்ணீா் விநியோகிக்கும் லாரிகள் வேப்பிலைகளைக் கட்டியபடியே இயக்கப்பட்டுவருகின்றன. மேலும், இருசக்கர வாகனங்கள் மற்றும் வீடுகளிலும் பெரும்பாலானோா் வேப்பிலையை கட்டிவைத்திருப்பதையும் காணமுடிந்தது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், வேப்பிலை சிறந்த கிருமி நாசினியாகக் கருதப்படுகிறது. ஆகவே வேப்பிலையால் கரோனாபரவலை கட்டுப்படுத்தக் கூடும் என நம்புவதால் அவற்றை வீடு, வாகனங்களில் கட்டியுள்ளோம் என்றனா்.