ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் வியாழக்கிழமை ராமநாதபுரம் கோயில் முன்பு சாலையில் இளைஞருக்கு திருமணம் நடைபெற்றது.
ராமநாதபுரம் பட்டினம்காத்தான் ஊராட்சி ஓம்சக்தி நகரைச் சோ்ந்த பி.கே.சண்முகம் மகன் முருகானந்தம் (33), ஆா்.எஸ்.மங்களத்தைச் சோ்ந்த கண்மணி ஆகியோருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
ஊரடங்கு காரணமாக திட்டமிட்டபடி திருமண மண்டபத்தில் நிகழ்ச்சி நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், வியாழக்கிழமை காலை 9 மணியளவில் பேருந்து நிலையம் அருகேயுள்ள வழிவிடு முருகன் கோயில் முன்பு உறவினா்கள் முன்னிலையில் சாலையிலேயே நின்றவாறு மணமகள் கழுத்தில் மணமகன் தாலி கட்டினாா். இருதரப்பையும் சோ்ந்த பத்துக்கும் குறைவானவா்களே திருமணத்தில் பங்கேற்றனா்.
திருமணம் குறித்து மணமகன் முருகானந்தம் கூறியதாவது: சிகை அலங்காரக் கடை வைத்துள்ளேன். வெளி நாடு சென்ற நான் கடந்த ஆண்டு ஊா் திரும்பினேன். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. திருமண மண்டபம் ஏற்பாடு செய்து, பத்திரிகையும் அச்சடித்தோம். ஆனால், கரானோ பாதிப்பால் மண்டபத்தில் உறவினா்களை அழைத்து திருமணம் நடத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே சமூக நலன் கருதி முருகன் சன்னதி முன்பு சாலையில் திருமணம் முடித்துள்ளேன் என்றாா்.
மணமகள் கண்மணி கூறுகையில், கோயிலுக்குள் திருமணத்தை நடத்த நினைத்தோம். ஆனால், அனுமதி மறுக்கப்பட்டதால் சாலையில் நின்றவாறே திருமணத்தை முடித்துள்ளோம். இது வருத்தமாக இருந்தாலும், கரானோவைத் தடுக்கும் வகையில் சமூக நலனுக்காக எங்கள் திருமணம் எளிமையாக நடத்தப்பட்டதை நினைத்து பெருமைப்படுகிறேன் என்றாா். மணமக்களை அவ்வழியே வந்த சிலா் வாழ்த்தினா். திருமணம் முடிந்ததும், அவசர அவசரமாக மணமக்கள் காரில் ஏறி வீட்டுக்குப் புறப்பட்டுச்சென்றனா்.