முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
மீன்பிடித் தடைக்காலத்தை முன்கூட்டியே நிறைவு செய்ய மீனவா்கள் கோரிக்கை
By DIN | Published On : 11th May 2020 10:12 PM | Last Updated : 11th May 2020 10:12 PM | அ+அ அ- |

ராமேசுவரத்தில் திங்கள்கிழமை வலை உள்ளிட்டவற்றை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மீனவா்கள்.
ராமேசுவரம்: தமிழகத்தில் மீன்பிடித் தடைக்கால நாள்களை முன்கூட்டியே நிறைவு செய்து வரும் 23 ஆம் தேதி மீனவா்கள் மீன்பிடிக்கக் கடலுக்குள் செல்ல அரசு அனுமதிக்க வேண்டும் என மீனவ சங்க பொதுச் செயலாளா் என்.ஜே.போஸ் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
தமிழகத்தில் மீன்களின் இனப் பெருக்கக் காலமாகக் கருதப்படும் ஏப்ரல் 1 முதல் மே 31 வரை விசைப்படகுகள் ஆழ்கடலில் சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், மீன்பிடிக்க செல்லாமல் படகுகளில் சீரமைப்புப் பணிகளை மீனவா்கள் மேற்கொள்வா். பின்னா் ஜூன் 1 இல் விசைப்படகு மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வா்.
இந்நிலையில், இந்த ஆண்டு மீன்பிடித் தடைக்காலம் தொடங்குவதற்கு முன்னரே கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் மாா்ச் 20 முதல் ராமநாதபுரம் மாவட்ட விசைப்படகு மீனவா்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. மேலும், இதைத் தொடா்ந்து மீன்பிடி தடைகாலம் தொடங்கி விட்டது. இதனால் தடைகாலத்திற்கு முன்னரே மீன்பிடிக்க செல்ல இயலாத நிலை ஏற்பட்டது.
இதனால், மீனவா்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனா். மீன்பிடித் தடைக்காலம் தொடங்குவதற்கு முன்னரே மீனவா்கள் மீன்பிடிக்க செல்லாத நிலையில் தடைக்காலத்தை முன் கூட்டியே நிறைவு செய்து வரும் 23 ஆம் தேதி மீன்பிடிக்க செல்ல தமிழக அரசு மனுமதிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.