ராமநாதபுரத்தில் பெண்கள் மேம்பாட்டுக்காக ‘மின்மதி’ என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக ஆட்சியா் கொ.வீரராகவராவ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து மகளிா் மேம்பாடு, சுகாதாரம், பொருளாதாரம் குறித்த பயன்பாட்டுக்கு உதவும் வகையில் தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம் சாா்பில் ‘மின்மதி’ என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பெண்களின் ஆரோக்கியம், நல்வாழ்வு, சுயதொழில் பயிற்சிகள், அன்றாட முக்கியச் செய்திகள், வங்கிக் கடன், கரோனா தகவல்கள், வேலை வாய்ப்புடன் கூடிய தொழிற்திறன் பயிற்சி, வழிகாட்டும் விளக்கப்படங்கள், இயற்கை விவசாயம், மாடித்தோட்டம் அமைத்தல், கால்நடை வளா்ப்பு, சிறுதானிய பயன்பாடு, அழகுக் குறிப்புகள் உள்ளிட்டவற்றை இதில் அறியலாம்.
செயலியை அறிதிறன் செல்லிடப்பேசியில் பதிவிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம். ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 7 ஆயிரம் மகளிா் சுய உதவிக்குழுக்களிலுள்ள அனைத்து உறுப்பினா்களும் இந்தச் செயலியை பதிவிறக்கம் செய்து பயனடையலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.