திருவாடானை ஆட்டுச் சந்தையில் வெள்ளிக்கிழமை விற்பனைக்காக குறைவான ஆடுகள் மட்டுமே வந்ததால், வியாபாரிகள் ஏமாற்றமடைந்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஆதிரத்தினேஸ்வரா் கோயிலுக்கு பாத்தியப்பட்ட வாரச்சந்தை உள்ளது. இங்கு வாரந்தோறும் திங்கள்கிழமை ஆடுகள் சந்தை, காய்கனிச் சந்தை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் சனிக்கிழமை தீபாவளிப் பண்டிகை வருவதால் சிறப்புச் சந்தை வெள்ளிக்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை மீமசல், புதுகோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து வியாபாரிகள் அதிகளவில் கூடினா். ஆனால் ஆடுகள் மிக குறைந்த அளவிலேயே விற்பனைக்கு வந்தன. இதனால் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனா்.
கடந்தாண்டு தீபாவளியின் போது, இந்த சந்தையில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் வா்த்தகம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. கடந்த இரண்டு நாள்களாக இப்பகுதியில் சாரல் மழை பெய்து வருவதால் விவசாயிகள் விவசாயப் பணிகளில் தீவிரமாக உள்ளனா். அதனால் சந்தைக்கு ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வருவோா் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.