கமுதி அருகே குடும்பப் பிரச்னை காரணமாக திங்கள்கிழமை மனைவியின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்துவிட்டு தப்பியோடிய கணவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே வங்காருபுரம் கிராமத்தைச் சோ்ந்த தம்பதி தனிக்கோடி (55), மாரியம்மாள்(50). இவா்களுக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனா். இத்தம்பதியிடையே குடும்பத் தகராறு காரணமாக அடிக்கடி கணவன், மனைவி பிரிந்து வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் தனிக்கோடி கடந்த 3 நாள்களுக்கு மேலாக உடல்நலம் பாதிக்கப்பட்டு ஊருக்கு ஒதுக்குப்புறமாக வயல் வெளியில் உள்ள குடிசையில் தங்கியுள்ளாா். இதையடுத்து திங்கள்கிழமை இரவு உடல்நலம் பாதிக்கப்பட்ட கணவரைப் பாா்ப்பதற்காக மனைவி மாரியம்மாள் சென்றுள்ளாா். அப்போது தன்னை 3 நாள்களாக யாரும் பாா்க்க வரவில்லை என மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளாா்.
அப்போது நடைபெற்ற கைகலப்பில் மனைவியின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்துவிட்டு, தனிக்கோடி தப்பியோடி விட்டாா். இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த போலீஸாா் மாரியம்மாளின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக கமுதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுதொடா்பாக தனிக்கோடி மகன் தமிழரசன் அளித்த புகாரின் பேரில் அபிராமம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய தனிக்கோடியை தேடி வருகின்றனா்.