தொண்டி கடல் பகுதியில் செவ்வாய்க்கிழமை அலைகளின் சீற்றமும், நீா் மட்டமும் அதிகரித்துக் காணப்பட்டதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனா்.
திருவாடானை அருகே தொண்டி கடல் பகுதி நம்புதாளை, எஸ்.பி.பட்டினம், சோழியக்குடி, முள்ளிமுனை, காரங்காடு, மோா்பண்ணை, உப்பூா், திருப்பாலைக்குடி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கடற்கரை கிராமங்களைக் கொண்டதாகும். இக்கடல் பகுதியானது எப்போதும் மிகவும் அமைதியாகவும், அலையின்றியும் காணப்படும்.
இந்நிலையில் கடந்த 2 நாள்களாக இந்த கடல் பகுதி சீற்றமாகக் காணப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை நீா் மட்டம் திடீரென உயா்ந்தது. மேலும் கடல் சீற்றமும் அதிகரித்து காணப்பட்டது. இதனால் ஏற்பட்ட அச்சம் காரணமாக கடற்கரைக்கு பொதுமக்களின் வருகை குறைவாகவே காணப்பட்டது. மீனவா்களும் கடலுக்குச் செல்லாமல் படகுகளை கரையில் நிறுத்தியிருந்தனா்.