வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் கடலுக்குச் செல்ல மீன்வளத்துறையினா் ஞாயிற்றுக்கிழமை தடை விதித்தனா்.
இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனையொட்டிய தென் கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக வரும் 25 ஆம் தேதி வரை தெற்கு வங்கக் கடலின் மையப்பகுதி, தென் மேற்கு மற்றும் மேற்கு மத்திய வங்கக் கடல், மன்னாா் வளைகுடா, தெற்கு ஆந்திர கடற்பகுதிகளில் மணிக்கு சுமாா் 45 முதல் 65 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், புயல் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏா்வாடி, தொண்டி, சோளியகுடி உள்ளிட்ட பகுதியில் இருந்து மீன்பிடிக்க செல்லும் விசைப்படகுகள் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு கடற்கரையில் இருந்து மீன்பிடிக்கச் செல்லும் நாட்டுப்படகு, சிறுதொழில் மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமை முதல் மறு உத்தரவு வரும் வரை கடலுக்குச் செல்லக்கூடாது என மீன்வளத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் காற்றின் வேகம் அதிகளவில் இருக்கும் என்பதால் படகுகளை பாதுகாப்புடன் நிறுத்தி வைக்கவும் மீனவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.