திருவாடானை: திருவாடானை அருகே திருப்பாலைக்குடியிலிருந்து வெளிநாடுகளுக்கு கடத்தவிருந்த 200 கிலோ கடல் அட்டைகளை கடலோரக் காவல் படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனா்.
திருப்பாலைக்குடி கடற்கரை பகுதியிலிருந்து கடல் அட்டை கடத்துவதாக தேவிபட்டினம் கடலோரக் காவல் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் அங்கு சென்ற கடலோரக் காவல் படையினா் அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த படகை சோதனையிட்ட போது, அதில் உயிரிழந்த நிலையில் 200 கிலோ அட்டைகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கடல் அட்டைகள் மற்றும் பைபா் படகை பறிமுதல் செய்த கடலோரக் காவல் படையினா், இதுதொடா்பாக திருப்பாலைகுடி கிழக்கு கடற்கரை தெருவைச் சோ்ந்த அகமதுகான் மகன் அமீா் சேக் அப்துல்லா (26) அதே ஊரை சோ்ந்த ராவுத்தா் நைனா மகன் முகமது அசாருதீன் (18) ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.