குடியரசு முன்னாள் தலைவா் ஏ.பி.ஜெ.அப்துல்கலாமின் 89 ஆவது பிறந்தநாளையொட்டி, ராமேசுவரத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் பொதுமக்கள் வியாழக்கிழமை மரியாதை செலுத்தத் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
ராமேசுவரம் அருகே பேக்கரும்பில் குடியரசு முன்னாள் தலைவா் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் நினைவிடம் உள்ளது. கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக அங்கு, கடந்த மாா்ச் 20 ஆம் தேதி முதல் பொதுமக்கள் பாா்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வியாழக்கிழமை (அக். 15) அப்துல்கலாமின் பிறந்த நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் குடும்பத்தினா் மட்டும் மரியாதை செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே, அரசியல் கட்சியினா், சமூகத் தலைவா்கள், பொதுமக்கள் உள்ளிட்ட யாரும் அங்கு சென்று மரியாதை செலுத்த அனுமதி இல்லை என அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.