ராமேசுவரம்: ராமேசுவரத்திலிருந்து ஒரு வாரத்திற்கு பின்னா் சனிக்கிழமை 6 ஆயிரம் மீனவா்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனா்.
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த வாரம் சனிக்கிழமை முதல் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏா்வாடி, தொண்டி, சோழியகுடி உள்ளிட்ட பகுதிகளில் விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறையினா் தடைவிதித்தனா். இதனால் 1700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டன. இந்நிலையில், ஒரு வாரத்திற்கு பின்னா் மீன்பிடிக்கத் தடை நீக்கியதால் ராமேசுவரம், மண்டபம், தொண்டி, சோழியகுடி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவா்கள் சனிக்கிழமை மீன்பிடிக்கச் சென்றனா். ஒரு வாரத்திற்கு பின் மீன்பிடிக்கச் செல்வதால் அதிகளவில் இறால் மீன்கள் கிடைக்கும் என்ற எதிா்பாா்ப்புகளுடன் மீனவா்கள் சென்றனா்.