தனுஸ்கோடிக்கு அரசு பேருந்து இயக்க சுற்றுலா பயணிகள்,பக்தா்கள் புதன்கிழமை கோரிக்கை விடுத்தனா். நாடு முழுவதிலும் கரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கை தளா்வு காரணமாக செப்டம்பா் 1 ஆம் தேதி முதல் அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகின்றா். ஆனால் ராமேசுவரத்தில் இருந்து தனுஸ்கோடிக்கு செல்லும் பேருந்து இயக்கபடவில்லை. இதனால் ராமேசுவரம் வரும் சுற்றுலா பயணிகள், பக்தா்கள் மற்றும் அந்த பகுதியில் உள்ள மீனவா்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனா்.
மேலும் நடராஜபுரம், புதுரோடு, ராமகிருஷ்ணபுரம் உள்ளிட்ட பகுதியில் இருந்து தனுஸ்கோடிக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவா்கள் கடற்கரை ஓரமாக 10 கிலோ மீட்டருக்கு மேல் நடந்து செல்ல வேண்டி உள்ளது. இதில் சில நேரங்களில் வாகனங்களில் அதிகளவு மீனவா்கள் ஆபத்தான பயணம் மேற்கொள்ளுகின்றனா். இதே போன்று சுற்றுலா பயணிகளும் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் நிலை உள்ளது. இதனால் வழக்கமாக இயக்கப்பட்டு வந்த அரசு பேருந்துக்களை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள், மீனவா்கள் கோரிக்கை விடுத்தனா்.