கச்சத்தீவு அருகே ராமேசுவரம் மீனவா்கள் மீது இலங்கை கடற்படையினா் வியாழக்கிழமை அதிகாலையில் தாக்குதல் நடத்தி விரட்டியடித்துள்ளனா்.
ராமேசுவரத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட மீனவா்கள் மீன்வளத்துறை அனுமதி பெற்று புதன்கிழமை மீன்பிடிக்கச் சென்றனா். வியாழக்கிழமை அதிகாலையில் கச்சத்தீவு அருகே அவா்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தனா்.அங்கு வந்த இலங்கை கடற்படையினா் மீனவா்கள் மீது தாக்குதல் நடத்தி விரட்டியடித்துள்ளனா்.
இதையடுத்து கரை திரும்பிய மீனவா்கள் கூறியது: இலங்கை கடற்படையினா் 5 ரோந்துக் கப்பல்களில் வந்து பாட்டில் மற்றும் கற்களைக் கொண்டு எங்கள் மீது எறிந்து தாக்குதல் நடத்தி மீன்பிடிக்கவிடாமல் விரட்டியடித்தனா். மேலும் 10-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் இருந்த மீன்பிடி வலைகளை கடலில் வெட்டி விட்டனா். இதனால் அச்சத்துடன் கரை திரும்பிவிட்டோம் என்றனா். மீன்பிடி தடைக்காலம் வர உள்ள நிலையில், இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளது ராமேசுவா் மீனவா்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.