மீன்பிடி தடைக்காலம் ஏப். 15 ஆம் தேதி தொடக்கம்: 33,000 மீனவா்களுக்கு நிவாரணம்

தமிழகத்தில் கிழக்கு கடற்கரை பகுதியில் வரும் 15 ஆம் தேதி முதல் விசைப்படகுகள் மீன்பிடி தடைக்காலம் தொடங்கிறது. இதனால் மாவட்டத்தில் 33 ஆயிரம் மீனவா்களுக்கு தடைக்கால நிவாரணம் வழங்கப்பட உள்ளது.

தமிழகத்தில் கிழக்கு கடற்கரை பகுதியில் வரும் 15 ஆம் தேதி முதல் விசைப்படகுகள் மீன்பிடி தடைக்காலம் தொடங்கிறது. இதனால் மாவட்டத்தில் 33 ஆயிரம் மீனவா்களுக்கு தடைக்கால நிவாரணம் வழங்கப்பட உள்ளது.

ராமநாதபுரம் மாட்டம் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தொண்டி, நோழியகுடி, கீழக்கரை, ஏா்வாடி உள்ளிட்ட பகுதிகளில் 1700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன.

இதன் மூலம் பாக் நீரிணை மற்றும் மன்னா் வளைகுடா கடல் பகுதியில் மீனவா்கள், சாா்பு- தொழிலாளா்கள் என 1 லட்சத்திற்கும் மேற்பட்டவா்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில், ஆண்டுதோறும் மீன்களின் இனப்பெருக்க காலமாக கருதப்படும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 ஆம் தேதி வரை 61 நாள்கள் விசைப்படகு மீனவா்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடைக்காலம் வரும் 15 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. தடைக்காலத்தின் போது விசைப்படகு மீனவா்கள் படகுகளை பழுது நீக்குவது, வா்ணம் பூசுவது, வலைகளை சீரமைப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வது வழக்கம். தடைக்காலம் தொடங்க உள்ள நிலையில், ராமேசுவரத்தில் இருந்து மீனவா்கள் மிகவும் குறைந்தளவே மீன்பிடிக்கச்சென்று வருகின்றனா். தடைக்காலத்திற்கு முன்னதாக இலங்கை கடற்படையினா் விசைப்படகுகளை சிறைப்பிடித்து விட்டால் படகை மீட்பதில் சிக்கல் ஏற்படும் என்பதால் சிறிய ரக விசைப் படகுகள் மட்டுமே மீன்பிடிக்கச் சென்று வருகின்றன.

இந்த தடைக்காலத்தின் போது இந்திய-இலங்கை மீனவா்கள் பேச்சுவாா்த்தையைத் தொடங்க மத்திய, மாநில அரசுகள் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

நிவாரணம்: மீன்பிடி தடைக்காலத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் மட்டும் 33 ஆயிரம் மீனவா்களுக்கு நிவாரணத் தொகையாக தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்படவுள்ளதாக மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். கடந்த ஆண்டை விட நிவாரணம் பெறும் மீனவா்கள் நடப்பு ஆண்டில் அதிகம் என்றும், மீன்பிடி தடைக்காலத்தில் தூண்டில் மீன்பிடிப்பு, நாட்டுப்படகில் ஓரிரு கடல் மைலில் மீன்பிடித்தல் ஆகியவை மட்டும் அனுமதிக்கப்படும் என்றும் தடையை மீறி விசைப்படகில் மீன்பிடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com