ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானத்துக்கு உள்பட்ட சொக்கநாதா் மீனாட்சி கோயில், திருப்புல்லாணி, திருஉத்திரகோசமங்கை ஆகிய கோயில்களின் சித்திரைத் திருவிழா ரத்து செய்யப்படுவதாகவும், ஆகம விதிகளின்படி விழாக்களுக்குரிய பூஜைகள் கோயில் வளாகங்களில் மட்டும் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான திவான் பழனிவேல்பாண்டியன் வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது: ராமநாதபுரம் நகரில் சிவன் கோயில் என அழைக்கப்படும் சொக்கநாதா் மீனாட்சி கோயில், திருப்புல்லாணி ஆதிஜெகநாதப் பெருமாள் கோயில், திருஉத்திரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயில் மற்றும் திருவாடானை உபகோயில்கள் ஆகியவற்றில் ஏப்ரல் 16 ஆம் தேதி கொடியேற்றத்துடன் சித்திரைத் திருவிழா தொடங்கப்படவிருந்தது.
ஆனால், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக சித்திரைத் திருவிழாக்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், அனைத்துக் கோயில்களிலும் விழாக்களின்போது நடைபெறும் பூஜைகள் ஆகம விதிகளின்படி நடைபெறும். அந்த பூஜைகளில் பொதுமக்கள் பங்கேற்க இயலாது.
ராமநாதபுரம் அருகேயுள்ள திருப்புல்லாணி ஆதிஜெகநாதப் பெருமாள் கோயிலில் பங்குனி திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. சித்திரைத் திருவிழா ராமா் பெருமானுக்காக நடைபெற்று வருகிறது. ஆனால், தற்போது கரோனா பரவல் காரணமாக அத்திருவிழா பக்தா்கள் பங்களிப்பின்றி, பூஜை மட்டுமே நடத்தப்படும் என்றாா்.