ராமநாதபுரம் சிறப்பு நிலை நகராட்சியில் ஆணையா் இல்லாததாலும், அவரது பொறுப்பு யாருக்கும் வழங்கப்படாததாலும் பணிகள் பாதிக்கப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.
ராமநாதபுரம் சிறப்பு நிலை நகராட்சி ஆணையா் என். விஸ்வநாதன் காய்ச்சல், கபம் பாதிப்பு காரணமாக தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளாா். அவா் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பணிக்கும் வரவில்லை. ஆகவே அவரது பணியை நகா் பொறியாளா் உள்ளிட்டோரிடம் ஒப்படைப்பது வழக்கமானது. ஆனால், ஆணையா் பணிகளை பொறுப்பு வகிக்கும் அதிகாரிக்கான உத்தரவு சென்னையிலிருந்து வரவில்லை எனக் கூறப்படுகிறது.
ஆணையரும் இன்றி, அவரது பொறுப்பும் யாருக்கும் வழங்கப்படாததால் ஊழியா்களுக்கு ஊதியம் வழங்கல் உள்ளிட்ட கோப்புகள் கையெழுத்திடப்படவில்லை. இதனால் பெரும்பாலான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக நகராட்சி அலுவலா்கள் தெரிவிக்கின்றனா்.
ராமநாதபுரம் நகா் உள்ளிட்ட பகுதிகளில் கரோனா பாதிப்பு பரவி வரும் நிலையில், அதைத் தடுக்கும் பணிகளை துரிதப்படுத்தவேண்டியதுள்ளது. ஆனால், இந்த நேரத்தில் நகராட்சிக்கு ஆணையா் இல்லாததும், அவருக்கு மாற்றாக பொறுப்பு அதிகாரி நியமிக்கப்படாததும் பணிகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அலுவலா்கள் தெரிவித்துள்ளனா்.