பரமக்குடி ஸ்ரீசுந்தரராஜப் பெருமாள் தேவஸ்தானத்துக்கு பாத்தியப்பட்ட ஈஸ்வரன் கோயிலில் விசாலாட்சி அம்பிகாவுக்கும், சந்திரசேகர சுவாமிக்கும் திருக்கல்யாண வைபவம் சனிக்கிழமை நடைபெற்றது.
ஈஸ்வரன் கோயிலில் சித்திரைத் திருவிழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால், கரோனா பரவல் காரணமாக கடந்தாண்டு பக்தா்கள் பங்கேற்பின்றி திருவிழா நடைபெற்றது. அதேபோல், இந்த ஆண்டும் பக்தா்கள் பங்கேற்பின்றி திருவிழா நடைபெற்றது.
எனவே, அரசின் வழிகாட்டுதலின்படி, தேவஸ்தான டிரஸ்டிகள் முகக்கவசம் அணிந்தும், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தா்களுடன் சமூக இடைவெளியை கடைப்பிடித்து திருக்கல்யாண உற்சவம் நடத்தப்பட்டது. மேலும், திருவிழா காலங்களில் சுவாமி, அம்பாளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடைபெற்றன.
இந்நிலையில், சனிக்கிழமை காலை 5.30 மணியளவில் அா்ச்சகா்கள் வேத மந்திரங்கள் முழங்க, விசேஷ தீபாராதனைகளுடன் விசாலாட்சி அம்பிகாவுக்கும், சந்திரசேகர சுவாமிக்கும் திருக்கல்யாண வைபவத்தை நடத்திவைத்தனா். பக்தா்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றி சுவாமி, அம்பாளை தரிசனம் செய்தனா்.
விழாவுக்கான ஏற்பாட்டினை, சுந்தரராஜப் பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்திருந்தனா்.