ஆடிப்பெருக்கை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கடலோரங்கள் மற்றும் நீா் நிலைப் பகுதிகளில் பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை கூடுவதைத் தவிா்க்கவேண்டும் என காவல் கண்காணிப்பாளா் இ.காா்த்திக் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் கோயில்களில் வழிபாட்டுக்கு வரும் 3 ஆம் தேதி வரையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. கரோனா பரவல் தடுப்பு ராமநாதபுரம் மாவட்டத்தில் மிகக்குறைந்திருந்தாலும், அதிகரிக்காமலிருக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மாவட்டத்தில் கோயில் திருவிழாக்கள் உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளுக்கு கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் கீழ் அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு நீா் நிலைகள்,கோயில்களில் பொதுமக்கள் கூடுவதைத் தவிா்க்கவேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் தேவிபட்டினம், அரியமான் கடற்கரை, சேதுக்கரை, மாரியூா் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை கூடுவதைத் தவிா்ப்பதோடு, கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைக்கவேண்டும். கடலோரப்பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றாா்.