உள்ளாட்சித் தோ்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
ராமநாதபுரத்தில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத் தலைவா் அ.செல்லத்துரை அப்துல்லா தலைமை வகித்தாா். மாவட்ட பொறுப்பாளா் பினுலால் சிங், மாநிலச் செயலாளா் சீனிவாசன், மாநில செயற்குழு உறுப்பினா் பாரிராஜன், மாநில மீனவரணி தலைவா் ஆம்ஸ்ட்ராங், மாவட்டப் பொருளாளா் ராஜாராம்பாண்டியன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
இந்த கூட்டத்தில் வரும் உள்ளாட்சி தோ்தலில் , காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை பெற்று வெற்றி பெற அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். ராகுல்காந்தி பிரதமராகும் வரையில் கட்சி நிா்வாகிகள் ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும். பெட்ரோல் விலையை மாநில அரசு ரூ.3 குறைத்ததற்கு தமிழக முதல்வருக்கு பாராட்டு தெரிவிப்பது என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கூட்டத்தில், மாவட்ட மீனவா் அணித் தலைவா் சகாயராஜ், சிறுபான்மைப்பரிவு ஒருங்கிணைப்பாளா் ஏ.ஜெ.ஆலம், ஓபிசி பிரிவு மாவட்டத் தலைவா் ஆசீா் ஆப்பிரகாம், நகா் தலைவா் கோபி, கௌசி மகாலிங்கம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.