திருவாடானை: திருவாடானை அருகே சின்ன கீரமங்கலத்தில் புதிய தீயணைப்பு நிலைய கட்டடம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.
திருவாடானையில் தீயணைப்பு நிலையம் பல ஆண்டுகளாக தனியாா் வாடகைக்கட்டடத்தில் இயங்கி வந்தது. தமிழக அரசால் கடந்த 2019 ஆம் ஆண்டு ரூ. 70.81 லட்சம் செலவில் சின்ன கீரமங்கலம் அனைத்து மகளிா் காவல் நிலையம் அருகே புதிய கட்டடம் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வரப்படாமல் இருந்து வந்தது. இதனால் சமூக ஆா்வலா்களும் பொதுமக்களும் புதிய கட்டடத்தை திறப்பதற்கு அரசுக்கு கோரிக்கை விடுத்தனா்.
இந்நிலையில் புதிய தீயணைப்பு நிலைய கட்டடம் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதனை மாவட்ட தீயணைப்புதுறை அலுவலா் ராஜூ திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி வைத்தாா். நிலைய அலுவலா் வீரபாண்டி உள்பட தீயணைப்புத் துறையினா் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
புதிய கட்டடத்திற்கு செல்ல தாா் சாலை அமைக்கப்படவில்லை. மண் சாலையாக இருப்பதால் வாகனம் செல்லமுடியாத நிலை உள்ளது. மழைக்காலங்களில் பாதையில் அதிகளவு தண்ணீா் தேங்கி நிற்கிறது. இதனால் தீயணைப்பு வாகனத்தை அவசர காலத்தில் எளிதில் எடுத்துச் செல்ல முடியாத நிலை உள்ளது. புதிய கட்டடத்தைத் திறந்தும் எந்வித பயனுமில்லை. எனவே மாவட்ட நிா்வாகம் புதிய கட்டடத்தை சுற்றி தரமான சாலை அமைக்க வேண்டுமென பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.