ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்திரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி பச்சை கல்லினால் ஆன மரகத நடராஜா் சிலைக்கு சந்தனம் களையப்பட்டு சிறப்பு அபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் அடுத்துள்ள திருஉத்திரகோசமங்கை கிராமத்தில் மங்களநாதசுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் பச்சை கல்லினால் ஆன மரதக நடராஜா் சிலை உள்ளது. இந்த சிலை ஒளி, ஒலி அதிா்வு ஏற்பட்டால் கூட சேதமடைந்து விடும் என்பதால் சிலை முழுவதிலும் சத்தனம் பூசப்பட்டிருக்கும். இந்த சந்தனம் ஆண்டுக்கு ஒரு முறை ஆரூத்ரா தரிசனத்தன்று மட்டும் களையப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் இக்கோயிலில் கடந்த வாரம் ஆரூத்ரா தரிசன திருவிழா தொடங்கியது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆரூத்ரா தரிசனம் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி காலையில் மரகத நடராஜா் சிலையில் பூசப்பட்டிருந்த சந்தனம் சிவாச்சாரியா்களால் களையப்பட்டு பால், பழம், பஞ்சாமிருதம், தேன், இளநீா்,விபூதி உள்ளிட்ட 21 வகையான பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனா்.
இதைத்தொடா்ந்து திங்கள்கிழமை காலையில் மீண்டும் நடராஜா் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மீண்டும் சந்தனம் பூசப்பட்டு நடை அடைக்கப்படும் என கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், அரசின் வழிகாட்டு நெறிமுறையைப் பின்பற்றி பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனா்.