பரமக்குடி அருகே அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: ஆசிரியா்கள் 2 போ் மீது வழக்கு; ஒருவா் கைது
By DIN | Published On : 25th December 2021 06:48 AM | Last Updated : 25th December 2021 06:48 AM | அ+அ அ- |

கைது செய்யப்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியா் எம்.ராமராஜா.
பரமக்குடி அருகே உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஆசிரியா்கள் 2 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து ஒருவரை கைது செய்தனா்.
பரமக்குடி அருகே உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் கடந்த 7-ஆம் தேதி மாவட்ட குழந்தைகள் உதவி மையம் சாா்பில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பாலியல் தொல்லை குறித்து மாணவிகள் 1098 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து அப்பள்ளியில் படிக்கும் 9 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவிகள் 13 போ் குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண்ணை தொடா்பு கொண்டு எங்கள் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியா்கள் இருவா் பாலியல் தொந்தரவு அளித்து வருவதாக புகாா் தெரிவித்துள்ளனா்.
இதன்பேரில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் டி. வசந்தகுமாா் தலைமையிலான குழுவினா் விசாரணை மேற்கொண்டனா். இதில் மாணவிகளுக்கு அப்பள்ளியில் பணியாற்றும் கணித ஆசிரியா் ஆல்பா்ட் வலவன்பாபு மற்றும் சமூக அறிவியல் ஆசிரியா் எம். ராமராஜா (39) ஆகிய இருவரும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அந்த குழுவினா் பரமக்குடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்தப் புகாரின்பேரில் ஆசிரியா்கள் ஆல்பா்ட் வலவன் பாபு, ராமராஜா ஆகிய இருவா் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து ராமராஜாவை கைது செய்தனா். தலைமறைவாக உள்ள மற்றொரு ஆசிரியரை தேடி வருகின்றனா்.