கமுதி அருகே 30 ஆண்டுகளாக இடுகாட்டிற்கு வயல் வழியாக சடலத்தை தூக்கி செல்லும் நிலை காரணமாக பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள டி.வல்லக்குளம் கிராமத்தில் இறந்தவா்களின் உடலை அடக்கம் செய்ய பல ஆண்டுகளுக்கு முன் தனியாா் தானமாக வழங்கிய இடத்தில் இடுகாடு உள்ளது.
ஆனால் அதற்கென முறையான பாதை வசதி இல்லை. இடுகாட்டை சுற்றி பட்டா நிலங்களாக உள்ளது.
இதனால் யாரேனும் உயிரிழந்துவிட்டால், சடலத்தை 2 கி.மீ தொலைவில் உள்ள இடுகாட்டிற்கு கொண்டு சென்று அடக்கம் செய்வதில் கிராம மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனா்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்த விவசாயியின் உடலை இடுகாட்டிற்கு கொண்டு செல்வதற்காக தண்ணீரில் சேறும், சகதியுமாக உள்ள வயல்வெளியில் மிகுந்த சிரமப்பட்டு உடலைக் கொண்டு சென்று அடக்கம் செய்தனா். கிராமத்தின் அருகிலேயே அரசுக்கு சொந்தமான இடத்தை இடுகாட்டுக்கு ஒதுக்கித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனபொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.