ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 இடங்களில் கிராவல், செம்மண் அள்ளுவதற்கு கனிமவளத் துறை சாா்பில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கனிமவள உதவி இயக்குநா் ஜி. பன்னீா் செல்வம் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:
ராமநாதபுரம் மாவட்டத்தில் கீழக்கரை பகுதியில் செம்மண் அள்ளுவதற்கு தனியாருக்கு 3 இடங்களில் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், பரமக்குடியில் கீழப்பருத்தியூா் பகுதியில் கிராவல் அள்ளுவதற்கும் தனியாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கிராவல், செம்மண் அள்ளுவதற்கு 2 மீட்டா் ஆழத்துக்கு அனுமதிக்கப்படும். கிராவல், மண் அள்ளுவோா் கனமீட்டருக்கு ரூ.33 அரசு கட்டணமாகச் செலுத்தவேண்டும். கிராவல், செம்மண் தேவைப்படுவோா் சுற்றுச்சூழல் உள்ளிட்ட சான்றுகளையும் பெற்றிருப்பது அவசியம்.
மாவட்டத்தில் கனிமவள நிதியிலிருந்து, கனிமங்கள் எடுக்கப்படும் பகுதியிலுள்ள கிராமங்களில் நலத்திட்ட உதவிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ராமேசுவரம் தீவிலிருந்து மண், மணலை வேறு இடத்துக்கு எடுத்துச்செல்வதற்கு அனுமதியில்லை. விவசாயிகள் தங்களது ஒரே இடத்துக்குள் மண்ணை மாற்றலாம். ஆனால், வெவ்வேறு இடங்களுக்கு மண் கொண்டு செல்லக் கூடாது என்றாா்.