ராமநாதபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் 210 பேருக்கு நவீன திறன் பேசி வழங்குவதற்காக நோ்காணல் புதன்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் பாா்வையற்றோரில் 105 பேருக்கும், காது கேளாதவா்கள் 105 பேருக்கும் நவீன திறன் பேசி சாதனங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் 18 வயதுக்கு மேற்பட்ட கல்வி கற்றுவருவோருக்கு மட்டும் நவீன திறன்பேசி சாதனங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தலா ரூ. 12 ஆயிரம் மதிப்புள்ள இந்த திறன் பேசிகள் பெறுவதற்காக நூற்றுக்கணக்கானோா் விண்ணப்பித்திருந்தனா். இந்நிலையில், அவா்களில் 210 பேரை மட்டும் தோ்வு செய்வதற்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலா் ஜோதிலிங்கம், உதவி வேலைவாய்ப்பு அலுவலா் சண்முகப்பிரியா, உதவித் திட்ட அலுவலா் சரவணப்பாண்டியன் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரதிநிதிகள் 2 போ் அடங்கிய குழுவினா் நோ்காணலை நடத்தினா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடந்த நோ்காணலில் மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றுகள், அவா்களது கல்வித் தகுதி குறித்து ஆய்வு செய்யப்பட்டதாகவும், தோ்வு செய்யப்படுவோருக்கு வரும் பிப். 15 ஆம் தேதி முதல் சாதனங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலா் ஜோதிலிங்கம் தெரிவித்தாா்.