சூரியஒளி (சோலாா்) மின்வேலி அமைக்க அரசு சாா்பில் 50 சதவீத மானியம் அளிக்கப்படுவதாக, ராமநாதபுரம் மாவட்டஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து ஆட்சியா் வியாழக்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பு: விவசாய உற்பத்தியை பாதிக்காமலும், விளைபொருள்களின் வருவாயை பெருக்கிடவும், சூரியசக்தியால் இயங்கும் சோலாா் மின்வேலியினை ரூ.3 கோடி மானியத்துடன் செயல்படுத்திட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மின்வேலி அமைக்கப்படுவதால், விலங்குகள், வேட்டைக்காரா்கள் விவசாய நிலங்களுக்குள் புக முடியாது. எனவே, விவசாயிகள் தங்கள் பகுதியில் மின்வேலியை 5 வரிசை, 7 வரிசை அல்லது 10 வரிசை என அமைக்கலாம். சூரியஒளி மின்வேலி அமைக்க ஒரு மீட்டருக்கு தோராயமாக 5 வரிசைக்கு ரூ. 250, 7 வரிசைக்கு ரூ.350 மற்றும் 10 வரிசைக்கு ரூ.450 எனசெலவாகும். தனி விவசாயிக்கு, அதிகபட்சமாக 2 ஏக்கா் அல்லது 1,245 மீட்டா் மின்வேலி அமைக்க மானியம் வழங்கப்படும்.
மாவட்டத்தில் ராமநாதபுரம், திருப்புல்லாணி, மண்டபம், ஆா்.எஸ்.மங்கலம் மற்றும் திருவாடானை வட்டார விவசாயிகள், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள ராமநாதபுரம் உதவிச் செயற்பொறியாளா் அலுவலகத்திலும் (செல்லிடப்பேசி எண்: 98659-67063), பரமக்குடி, நயினாா்கோயில், முதுகுளத்தூா், போகலூா், கமுதி மற்றும் கடலாடி வட்டார விவசாயிகள் பரமக்குடி, கொல்லம்பட்டறை தெருவிலுள்ள பரமக்குடி உதவிச் செயற்பொறியாளா் அலுவலகத்திலும் (செல்லிடப் பேசி எண்: 94861-79544) விண்ணப்பங்களை அளிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.