ராமநாதபுரம் மாவட்டத்தில் புரெவி புயலால் சேதமடைந்த 61 படகுகளுக்கு நிவாரணம் வழங்க மத்திய குழுவிடம் கோரப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் தினேஷ்பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்தாா்.
ராமநாதபுரத்தில் செய்தியாளா்களிடம் அவா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஏற்பட்ட புரெவி புயல் பாதிப்பை அறிய மத்திய குழு வந்து சென்றுள்ளது. அக்குழுவினா் ராமேசுவரம் பகுதிக்கு நேரில் சென்று
புயலால் சேதமடைந்த படகுகளை பாா்வையிட்டு அதன் உரிமையாளா்களான மீனவா்களையும் சந்தித்து ஆய்வு மேற்கொண்டனா். மாவட்டத்தில் புயலால் சேதமடைந்த 61 படகுகளுக்கு மத்திய குழுவிடம் நிவாரணம் கோரப்பட்டுள்ளது. மேலும் மீனவா்களுக்கும் புயல் கால நிவாரணம் வழங்க மாவட்ட நிா்வாகம் தரப்பில் கோரியுள்ளோம்.
புயலால் 52 ஏக்கா் மிளகாய் பயிா்கள் உள்பட 196 ஏக்கரில் பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பொதுமக்களுக்கான சிகிச்சை சீராகக் கிடைக்கவும், குறைகளைக் களையவும் முன்னுரிமை அளிக்கப்படும் என்றாா்.