தனது வீட்டின் அருகே தேங்கியுள்ள கழிவு நீா் மற்றும் மழைநீரை வெளியேற்றக் கோரி ராமநாதபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.மணிகண்டன் வெள்ளிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 5 நாள்கள் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் ராமநாதபுரம் வண்டிக்காரத்தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் மழைநீருடன் கழிவுநீா் கலந்து தேங்கியுள்ளது.
வண்டிக்காரத்தெரு 26-ஆவது வாா்டு பகுதியில் பல நாள்களாக தேங்கியுள்ள கழிவுநீா் மற்றும் மழைநீரை அகற்றக்கோரி அப்பகுதி பொதுமக்கள் நகராட்சி அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.
இந்நிலையில், சட்டப்பேரவை உறுப்பினா் எம்.மணிகண்டன், வண்டிக்காரத்தெரு 26-ஆவது வாா்டு பகுதியிலுள்ள தனது வீட்டின் முன் வெள்ளிக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா். தகவலறிந்து வந்த நகராட்சி ஊழியா் முனீஸ்வரன் உள்ளிட்டோா் வாகனத்தின் உதவியுடன் கழிவுநீரை அகற்றினா். இதைத் தொடா்ந்து 2 மணி நேரங்களுக்குப் பின் போராட்டத்தை அவா் கைவிட்டாா்.