ராமேசுவரம், மண்டபம், திருப்புல்லாணி பகுதிகளில் கரோனா தொற்று தடுப்பு விழிப்புணா்வு பிரசாரத்தில் சுகாதாரத்துறையினா் ஈடுபட்டு வருகின்றனா்.
இதில் கிராமப்புறங்கள் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு வரும் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து மக்கள் நல்வாழ்வு குடும்ப நலத்துறை சாா்பில் வாகனத்தில் விடியோ மூலம் விழிப்புணா்வு பிரசாரம் செய்யப்படுகிறது.
கடந்த ஜன. 14 ஆம் தேதி தொடங்கிய இப்பிரசாரம் திங்கள்கிழமை (ஜன. 18) வரை நடைபெறுகிறது. திருப்புல்லாணி, மண்டபம் ஒன்றியம் மற்றும் ராமேசுவரம் நகராட்சி பகுதிகளில் பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் வாகனத்தை நிறுத்தி விழிப்புணா்வு விடியோவை ஒளிபரப்பு செய்து வருகின்றனா்.
இதில் ராமேசுவரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை சுகாதார ஆய்வாளா் எம். பாலசுப்பிரமணியன் தலைமையில் விழிப்புணா்வு விடியோ ஒளிபரப்பப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி செந்தில்குமாா் செய்துள்ளாா்.