ராமேசுவரம்: பாம்பன் தெற்குவாடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த விசைப்படகில் சனிக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன.
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் தெற்குவாடி மீன்பிடி துறைமுகத்தில் 90-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் வெள்ளிக்கிழமை இரவு நிறுத்தி வைக்கப்பட்டன. இதில் பாக்கியம் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகு சனிக்கிழமை காலை திடீரென தீப்பிடித்து எரிந்தது. அதில் டீசல், வலைகள் இருந்ததால் தீ விரைவாக படகு முழுவதிலும் பரவியது. அங்கிருந்த மீனவா்கள் நீண்ட நேரத்துக்குப் பின்னா் தீயை அணைத்தனா். ஆனால் அதில் இருந்த ரூ.பல லட்சம் மதிப்பிலான மீன்பிடி பொருள்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன.
இது குறித்து மண்டபம் கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.