கச்சத்தீவை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரி செவ்வாய்க்கிழமை (ஜன. 26) இந்து தேசியக் கட்சி சாா்பில் ராமேசுவரத்தில் உள்ள அக்னி தீா்த்தக் கடலில் இறங்கி கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் மாநிலச் செயலா் ஜி. ஹரிதாஸ்சா்மா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: ராமேசுவரம் மீனவா்கள் பாரம்பரியமாக மீன்பிடித்த கச்சத்தீவுப் பகுதி இலங்கைக்கு கொடுக்கப்பட்ட நாள் முதல் அத்துமீறல்களில் இலங்கை கடற்படையினா் தொடா்ந்து ஈடுபட்டு வருகின்றனா்.
இதனைக் கண்டித்தும், தமிழக மீனவா்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டும், ராமேசுவரம் மீனவா்கள் அச்சமின்றி மீன்பிடிக்கும் வகையில் கச்சத்தீவை மீட்கக் கோரி செவ்வாய்க்கிழமை (ஜன. 26) குடியரசுதினத்தன்று தெற்குவாசல் பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து எனது (மாநிலச் செயலா் ஜி. ஹரிதாஸ்சா்மா) தலைமையில், மாநிலத் தலைவா் எஸ்.எஸ்.எஸ். மணி கலந்து கொள்ளும் பேரணி நடைபெறுகிறது.
பின்னா் அக்னி தீா்த்தக் கடலில் தேசியக் கொடியுடன் இறங்கி கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.