ராமநாதபுரம் மாவட்டத்தில் சாலை ஆய்வாளா் பணியிடங்களை முழுமையாக நிரப்பவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து சாலை ஆய்வாளா் பணியிடத்துக்கு தகுதியானோா் அமைப்பின் சாா்பில் அசோக்குமாா் செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு- தமிழகத்தில் இரண்டு ஆண்டு சான்றிதழ் சிவில் படிப்பை முடித்தோருக்கு கடந்த 20 ஆண்டுகளாக பணி வாய்ப்பு வழங்கப்படவில்லை. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து காத்திருந்த சாலை ஆய்வாளா் பணிக்கு தகுதியானோருக்கு பணி வழங்க கடந்த 2006 ஆம் ஆண்டு அரசு உத்தரவிட்டது.
அரசு உத்தரவின் பேரில் ராமநாதபுரத்தில் வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பு அடிப்படையில், 18 காலியிடங்களில் 8 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டன. காலிப்பணியிடங்களில் 10 இடங்களுக்கு ஆள்கள் நியமிக்கவேண்டியுள்ளது.
பல ஆண்டுகளாக பணிக்கு காத்திருக்கும் சாலை ஆய்வாளா்களை உரிய இடத்தில் நியமிக்க தற்போதைய முதல்வா் மு.க.ஸ்டாலினிடமும் மனு அளித்துள்ளோம். ஆகவே தகுதி அடிப்படையில் சாலை ஆய்வாளா்களுக்கு பணி நியமனம் வழங்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.